ECONOMYMEDIA STATEMENTPBT

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் எண்ணிக்கை 98 விழுக்காட்டை எட்டுகிறது

கோலாலம்பூர், ஜன 6- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி வரை 2 கோடியே 28 லட்சத்து 72 ஆயிரத்து 297 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 259 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 61 ஆயிரத்து 997 பேர் அல்லது 87.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகவும் 28 லட்சத்து 52 ஆயிரத்து 677 பேர் அல்லது 90.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 245,326 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 2,747 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 3,859 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 238,720 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 85 லட்சத்து 54 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. 

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 71 லட்சத்து 7 ஆயிரத்து 613 ஆக உள்ளது.

இதனிடையே, கோவிட்-19 சம்பந்தப்பட்ட 18 மரணச் சம்பவங்கள் நேற்று நாட்டில் பதிவு செய்யப்பட்டதாக கிட்ஹாப் கே.கே.எம். அகப்பக்கம் கூறியது.


Pengarang :