ஷா ஆலம், ஜன 8- வெள்ள பாதிப்பு காரணமாக மறு நிர்மாணிப்பு செய்ய வேண்டிய மற்றும் பழுதுபார்க்க வேண்டிய 908 வீடுகள் இம்மாதம் 4 ஆம் தேதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 876 வீடுகளை பழுது பார்க்கவும் மேலும் 32 வீடுகளை முழுமையாக மறு நிர்மாணிப்பு செய்யவும் வேண்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த வீடுகளின் நிலை மற்றும் எத்தகைய உதவிகளை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலை நேற்று முன்தினம் கூறிய ஆட்சிக்குழு பணித்துள்ளதாக அவர் சொன்னார்.
மத்திய அரசிடமிருந்தும் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு அதற்கு இணையான உதவிகளை நாமும் வழங்கும் வேளையில் சிலாங்கூர் ஜக்கத் அறவாரியத்திடமிருந்தும் உதவிகளும் உதவி கிடைக்கும் என்றார் அவர்.
வெள்ள நிலவரங்கள் தொடர்பில் இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலை குறித்து ரோட்சியா இன்னும் ஒரு வார காலத்தில் ஆய்வினை மேற்கொள்வார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, உடைந்த, மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து மாநில அரசு பின்னர் அறிவிக்கும் என்றார் அவர்.