MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

புலியின் தாக்குதலில் பூர்வக்குடி பலி- குவா மூசாங்கில் சம்பவம்

குவா மூசாங், ஜன 8- பூர்வக்குடி ஆடவர் ஒருவரை புலி அடித்துக் கொன்றது. இச்சம்பவம் இங்குள்ள போஸ் பிஹாய், கம்போங் யா பகுதியில் நேற்று காலை 9.00 மணியளவில் நிகழந்தது.

புலியின் தாக்குதலுக்குப் பலியானவர் 59 வயதான அனேக் பின் ஆலோங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் சீக் சூன் ஃபூ கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான தகவலை நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையின் ஊழியர்களிடமிருந்து தாங்கள் பெற்றதாகவும் பூர்வக் குடியினர் மேம்பாட்டு இலாகா அதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 9.10 மணியளவில் அந்த ஆடவர் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததைக் கண்ட அவரது மகள் தன் தந்தையை உரக்க அழைத்துள்ளார். எனினும் பதில் வராததை கண்டு அவ்விடம் நோக்கி சென்றுள்ளார்.

அப்பகுதியில் செடிகளின் இலைகளில் இரத்தம் படிந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பொது மக்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவ்வாடரை தேடிச் சென்ற பொது மக்கள் அவரது உடலுக்கு அருகில் புலி ஒன்று நிற்பதைக் கண்டு அதிர்சியடைந்தனர். புலியை நோக்கி அவர்கள் ஈட்டிகளை எறிந்தனர். ஈட்டிகளில் ஒன்று முகத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அப்புலி அங்கிருந்து தப்பியோடியது என சீக் அறிக்கை ஓன்றில் தெரிவித்தார்.

மாலை 5.40 மணியளவில் சம்பவம் இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த ஆடவரின் உடலை மீட்டு சவப்பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :