ஷா ஆலம், ஜன 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடைகள் விநியோக மையத்தில் ஐந்து டன் வரையிலான உடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆடை விநியோகத் திட்டத்தின் வாயிலாக தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக லீட் யு.பி. மலேசியா அமைப்பின் நிறுவனர் சங்கீதா ஜெயக்குமார் கூறினார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
படுக்கை விரிப்பு, திரைச்சீலை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பெம்பர்ஸ் ஆகியவற்றோடு சமையல் பாத்திரங்களும் இங்கு உள்ளன. இப்பொருள்கள் யாவும் பொது மக்கள் வழங்கிய நன்கொடை மூலம் பெறப்பட்டவையாகும் என்றார் அவர்.
அரசு சாரா அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக கூறிய அவர், பல்வேறு தரப்பினர் வழங்கிய பொருள்கள் ஒன்று சேர்க்கப்பட்டு இங்கு விநியோகிக்கப்படுகிறது என்றார்.
இந்த இலவச உடை விநியோக சேவை நேற்று தொடங்கி இன்று வரை தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.