ஷா ஆலம், ஜன 11– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி நிதி வழங்கும் பணி அடுத்த மாதம் முற்றுப் பெறும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் நேற்று வரை 25,000 பேருக்கு 2 கோடியே 50 லட்சம் வெள்ளி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களில் தங்கியிராதவர்களை பதிவு செய்யும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டபடி சுமார் 30,000 குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதவாக்கில் வெள்ள நிவார நிதி வழங்கும் திட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீட்டினைச் சுத்தம் செய்யும் போது உயிரிழந்த சுபாங் ஜெயா மாநகர் மன்ற பணியாளர் முகமது இக்ராம் பக்ரியின் துணைவியாரை சந்தித்து ஆறுதல் கூறியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.