ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

87.9 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 11- நாட்டிலுள்ள பெரியவர்களில்  97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 86 ஆயிரத்து 013 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.  நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை எட்டுவதற்கு இன்னும் 2.2 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.

மேலும், 99 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 208 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்  87.9 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 67 ஆயிரத்து 385 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 90.8 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 57 ஆயிரத்து 194 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 223,463 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 3,273 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 2,114 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 218,076 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை  5 கோடியே 95 லட்சத்து 11 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, நேற்று கோவிட்-19 தொடர்பான 18 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :