கோலாலம்பூர், ஜன 12- சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய உம்ரா யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட 16 கோவிட்-19 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உம்ரா கடமையை நிறைவேற்றியப் பின்னர் நாடு திரும்பிய 456 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில் 219 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் நேற்று வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. அவற்றில் ஏழு உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆறு நோய்த் தொற்றுகள் ஒமிக்ரோன் வகையைச் சேர்ந்தவை என சந்தேகிப்படும் வேளையில் அதன் சோதனை முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
உம்ரா கடமையை நிறைவேற்றும் போது நிலையான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) யாத்ரீகர்கள் கடைபிடிக்காததே இந்த நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காதது, முகக் கவசம் அணியாதது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்ரீகர்கள் வந்தது ஆகியவை நோய்ப் பரவலுக்கான காரணங்களில் அடங்கும் என்றார் அவர்.
இது தவிர, உம்ரா கடமையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கட்டாய தனிமைப் படுத்துதல் காலத்தின் போது எஸ்.ஒ.பி. விதிகளை பலர் கடைபிடிக்காமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்துள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.
உம்ரா யாத்ரீகர்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் நோய்த் தொற்று தீவிரமாக பரவுவது கவலையளிப்பதாக உள்ளது எனக் கூறிய அவர், யாத்ரீகர்களின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் நோய்த் தொற்று விரைவாக பரவி வருகிறது என்றார்.