ஷா ஆலம், ஜன 12- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் ஊக்கத் தடுப்பூசி இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு இன்னும் ஊக்கத் தடுப்பூசி பெறாத மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த ஊக்கத் தடுப்பூசி இயக்கம் வரும் 14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தஞ்சோங் சிப்பாட் காம்ப்ளெக்ஸ் முகிபாவிலும் 16 ஆம் தேதி பண்டமாரான் காப்ளெக்ஸ் சுக்கான் மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இந்த ஊக்கத் தடுப்பூசி 18 வயதைக் கடந்தவர்களுக்கும் சினோவேக் தடுப்பூசியை மூன்று மாதங்களுக்கு முன்னர் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மைசெஜாத்ரா செயலியில் முன்பதிவு இன்னும் கிடைக்காதவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்விரு தொகுதிகளுக்கும் தலா 1,000 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி பெற விரும்புவோர் மைகாட் மற்றும் கடப்பிதழை உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.