ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தைப்பூசத்தை முன்னிட்டு புக்கிட் ரோத்தான், கிள்ளான்-தெலுக் இந்தான் சாலைகள் இரு தினங்களுக்கு மூடப்படும்

ஷா ஆலம், ஜன 15- கோல சிலாங்கூர், 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவை முன்னிட்டு வரும் திங்கள் தொடங்கி இரு தினங்களுக்கு கோல சிலாங்கூரில் இரு சாலைகள் போக்குவரத்து மூடப்படும்.

ஜாலான் புக்கிட் ரோத்தான் மற்றும் ஜாலான் கிள்ளான்- தெலுக் இந்தான் ஆகியவையே போக்குவரத்துக்கு மூடப்படவுள்ள அந்த சாலைகளாகும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ரம்லி காசா கூறினார்.

மூடப்படும் இந்த சாலைகளுக்கு பதிலாக போக்குவரத்துக்கு மாற்று வழிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று அவர் சொன்னார்.

தெலுக் இந்தானிலிருந்து கிள்ளான் செல்லும் சாலையின் 45.5 வது கிலோ மீட்டர் பகுதி மூடப்பட்டு தெலுக் பியா சமிக்ஞை விளக்கிற்கு அருகில் வழி மாற்றம் செய்யப்படும்.

கிள்ளானிலிருந்து தெலுக் இந்தான் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக ஒரு தடம் மட்டுமே திறந்து விடப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இப்பகுதிகளில் சீராக போக்குவரத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதே சமயம் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படும் என்றார் அவர்.

 

மேற்குறிப்பிட்ட தினங்களில் காவல் துறை நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்  கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்படும் என்பதோடு அவை அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

Pengarang :