கோலாலம்பூர், ஜன 15- நாட்டில் 3,346 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,684 ஆக இருந்தது.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 29 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 3,297 பேர் அல்லது 98.5 விழுக்காட்டினர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 49 பேர் அல்லது 1.5 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோயாளிகளில் 204 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 95 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, நேற்று புதிதாக மூன்று நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதனுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.