ஷா ஆலம், ஜன 18- தைப்பூசத்தை முன்னிட்டு ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் ஆலயத்தில் 500 பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
நேர்த்திக் கடனைச் செலுத்திய பக்தர்களால் ஆலயத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இவ்வாலயத்தில் தைப்பூச விழா மிதமான அளவில் அதே சமயம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடித்தனர் என்று அவர் சொன்னார்.
பூஜைகள் முடிந்தப் பின்னர் பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உடனடியாக கோயில் வளாகத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்றார் அவர்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை மிதமான அளவில் தைப்பூசத்தை கொண்டாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதை பக்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்ததுதான் முக்கியம். அடுத்தாண்டு நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறும் போது நாம் வழக்கம் போல் தைப்பூச விழாவைக் கொண்டாடலாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.