ஷா ஆலம், ஜன 19- சிலாங்கூர் மாநில கிராம சமூக மேம்பாட்டு மன்றத் தலைவர்களாக (எம்.பி.கே.கே.) 11 பெண்கள் உள்பட 77 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 2022-2023 ஆம் ஆண்டு தவணைக்கான நியமனக் கடிதங்களை சம்பந்தப்பட்ட கிராமத் தலைவர்கள் புதுக் கிராம மேம்பாட்டுத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானிடமிருந்து நேற்று பெற்றுக் கொண்டனர்.
இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட 77 பேரில் இரு இளைஞர்கள் உள்பட 22 பேர் புது முகங்களாவர். பத்தாங் காலி, கம்போங் பாரு கெர்னி மற்றும் கோல குபு பாரு, கம்போங் அசாம் கும்பாங் பகுதிக்கு அவ்விருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனச் சடங்கில் உரையாற்றிய இங். நீங்கள் அனைவரும் இனி சிலாங்கூர் மாநில அரசின் பிரதிநிதிகளாக செயல்படவிருக்கிறீர்கள். அரசாங்கத்தின் மேம்பாட்டிற்கேற்ப புதுக் கிராமங்கள், கம்போங் பாகான், கம்போங் தெர்சூசுன் ஆகியவற்றின் வளர்ச்சியை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுடையது என தெரிவித்தார்.
இந்தப் பணியை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளும்படி கிராமத் தலைவர்களுக்கு உத்தரவிட்ட அவர், பணியை ஆற்றும் போது அனுபவம் வாய்ந்தர்களின் ஆலோசனையையும் பெறும் படி கேட்டுக் கொண்டார்.