கோலாலம்பூர், ஜன 20- 2022 ஆம் ஆண்டுக்கான மாட்சிமை தங்கிய பேரரசர் உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ள மலேசியர்களுக்கு பொதுச் சேவைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மொத்தம் 12 துறைகளுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதாக அத்துறை தெரிவித்தது. மாஸ்டர் எனப்படும் முதுகலைப் படிப்புக்கு ஆறு உபகாரச் சம்பளங்களும் பி.எச்.டி. எனப்படும் ஆய்வியல் படிப்புக்கு ஆறு உபகாரச் சம்பளங்களும் வழங்கப்படுகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், இஸ்லாமிய நிதியில் ஆகிய துறைகளில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோர் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மலேசிய பிரஜைகளாகவும் 2022 ஜனவரி 1 ஆம் தேதியில் 35 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
பொதுச் சேவைத் துறையால் பட்டியலிடப்பட்ட உயர்கல்விக் கூடங்களில் முழு நேரக் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் அல்லது கல்வியை முழு நேரக் கல்வியை குறிப்பிடப்பட்ட ஆண்டில் தொடங்கியவர்களாக இருத்தல் அவசியம்.
இந்த உபகாரச் சம்பளத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் http://esilav2.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக இணையம் வழி விண்ணப்பம் செய்யலாம்.