பெட்டாலிங் ஜெயா, ஜன 24- இவ்வாண்டில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கு எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் 50 லட்சம் வெள்ளி வரை செலவு செய்யும்.
சமூகத் திட்டங்கள், பயிற்சி, கருத்தரங்கு, விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் ரமலான் நிகழ்வுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் இளைஞர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இது போன்ற திட்டங்களில் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் சொன்னார்.
டாமான்சாரா டாமாய், லெஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மற்றும் ஆதரவற்ற சிறார்களுக்கு உணவுக் கூடைகளை மற்றும் ரொக்கத் தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூக நலத் திட்டங்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு கடந்தாண்டில் எம்.பி.ஐ. க்கு 2 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.