ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 43,112 பேர் 1,000 வெள்ளி நிவாரண நிதியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 24- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43,112 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த உதவித் திட்டத்திற்கு இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியை வழங்குவதற்காக 120,000 வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான்  மாவட்டத்தில் மிக அதிகமாக 11,888 பேரும்,  பெட்டாலிங் மாவட்டத்தில் 7,241 பேரும், உலு லங்காட்டில் 7,120 பேரும், கோல லங்காட்டில் 5,279 பேரும் சிப்பாங்கில் 3,966 பேரும், கோம்பாக்கில் 898 பேரும் உலு சிலாங்கூரில் 93 பேரும் சபாக் பெர்ணமில் 39 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 70,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மந்திரி புசார் கூறினார். அந்த விண்ணப்பங்களில் பாதிக்கும் மேல் பரிசீலிக்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழஙகுவதற்கும் அடிப்படை  வசதிகளை சரி செய்வதற்கும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000  வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :