ஷா ஆலம், ஜன 25- சிலாங்கூரில 2022 சீனப்புத்தாண்டு விழாவுக்கான உச்சவரம்பு விலை பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருள்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் முடிவு எடுப்பதற்காக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவுடன் நாளை சந்திப்பு நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
வழக்கமாக, சீனப்புத்தாண்டு போன்ற பெரிய விழாக்களின் போது உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு உச்சவரம்பு விலைத் திட்டத்தை அமல்செய்யும். வழக்கம் போல் கோழி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் பட்டியலில் இடம் பெறும் என்றார் அவர்.
பெர்ஜெயா பார்க்கில் உள்ள விஸ்மா கோஹிஜ்ரா சிறு வணிகர்களுக்கு உதவிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த உச்சவரம்பு விலைத் திட்டம் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் பொருள்களின் விலையை விருப்பம் போல் உயர்த்தாமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும்படி வணிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் சந்தையில், மீன்,கோழி, காய்கறிகள் போன்ற பொருள்களின் விலை உயர்வு கண்டுள்ளது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை தாம் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.