புத்ராஜெயா, ஜன 25 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் பந்துவான் வாங் ஏசான் உதவித் திட்டத்தின் கீழ் நிதியதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதே முக்கிய காரணம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
உண்மையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதாவது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.
சில வீடுகளில் கணுக்கால் உயரத்திற்கு மட்டுமே வெள்ளம் ஏறியிருந்தது. மேலும், அவர்கள் நிவாரண மையங்களுக்கு செல்லாமல் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர். என்று அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிக நிவாரண மையங்களில் தங்காதவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்ற எங்களின் அறிவிப்பு பலரை இந்த நிதிக்கு விண்ணப்பிக்கத் தூண்டியுள்ளது. இது தவிர, சில விண்ணப்பங்கள் மிகவும் சந்தேகத்திற்குரியதாகவும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கிராமங்களின் தலைவர்கள் அல்லது சமூகத் தலைவர்களின் உறுதிச் சான்று எங்களுக்குத் தேவைப்படுகிறது என்று அவர் இன்று பிரதமர் துறை ஊழியர்களிடம் உரையாற்றியபோது கூறினார்.