ஷா ஆலம், ஜன 26- வெள்ள நிவாரண நிதிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிப்பதற்கும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவி நிதியை விரைந்து வழங்குவதற்கும் ஏதுவாக களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்று சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிப்பதற்கு ஏதுவாக குறைவான வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இதர மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை தருவிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட அலுவலகம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்று, இங்குள்ள கோஹிஜ்ரா கூட்டுறவு சங்கத் தலைமையகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு உதவிப் பொருள்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்தின் போது வீடுகளில் தங்கியிருந்த அல்லது நிவாரண மையங்களல் தஞ்சம் புகுந்த சுங்கை காண்டீஸ் தொகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதியைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.