ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரணத் தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று நேற்று வரை 49,932 ஆக அதிகரித்தள்ளது.
பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த உதவித் திட்டத்திற்கு இதுவரை 4 கோடியே 99 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியை வழங்குவதற்காக 120,000 வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக 12,728 பேரும், பெட்டாலிங் மாவட்டத்தில் 12,734 பேரும், உலு லங்காட்டில் 7,703 பேரும், கோல லங்காட்டில் 6,778 பேரும் சிப்பாங்கில் 6,232 பேரும், கோல சிலாங்கூரில் 2,730 பேரும் கோம்பாக்கில் 893 பேரும் உலு சிலாங்கூரில் 94 பேரும் சபாக் பெர்ணமில் 40 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழஙகுவதற்கும் அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.