ஷா ஆலம், ஜன 28- நிலச் சரிவு மற்றும் மண் உள்வாங்குவது போன்ற பிரச்சனைகளுக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு மாநிலத்தில் உள்ள ஆபத்து நிறைந்த மலைச்சாரல்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இக்ராம் எனப்படும் மலேசிய பொதுப்பணி கழகத்துடன் நடத்தப்பட்ட விவாதத்தில் கோம்பாக் மற்றும் உலு லங்காட்டில் மண் சரிவு அபாயம் உள்ள 25 மலைச்சாரல்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
அண்மையில் மண் சரிவு ஏற்பட்ட லெஸ்தாரி பெர்டானா ஸ்ரீ கெம்பாங்கான் பகுதி மலைச்சாரல் பகுதியாக இல்லாவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ கெம்பாங்கான் மண் சரிவு பிரச்சனைக்கு தீர்வு காணும் அதே வேளையில் இதே போன்ற பிரச்சனை இதர இடங்களிலும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீ கெம்பாங்கானில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து விவரித்த அவர், அப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இரும்பு தூண்களைப் பதிக்கும்படி சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தை தாம் பணித்துள்ளதாக சொன்னார்.