ஷா ஆலம், ஜன 29- கால்நடைகளை பொது இடங்களில் மேய விட்ட குற்றத்திற்காக நான்கு கால்நடை உரிமையாளர்களுக்கு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்துள்ளது.
பெஸ்தாரி ஜெயா மற்றும் ஜெராம் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அந்த நான்கு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது இரு மாடுகள் மற்றும் இரு ஆடுகள் பிடிக்கப்பட்டதாகவும் அது கூறியது.
பொது இடங்களில் குறிப்பாக வீடமைப்பு பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு மாடுகள் மற்றும் எருமைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் 4(4) பிரிவின் கீழ் அந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிடிபட்ட கால்நடைகள் நகராண்மைக் கழகத்திற்கு சொந்தமான கொட்டிலில் அடைத்து வைக்கப்பட்டன எனவும் அது தெரிவித்தது.