ஷா ஆலம், ஜன 29- கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொண்டு வரும் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகள் 15 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன.
உலு லங்காட் மாவட்டத்தின் ஸ்ரீ நண்டிங், தாமான் ஸ்ரீ மூடா, தாமான் கிள்ளான் உத்தாமா, ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படுதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
கால்வாய்களில் காணப்படும் சகதிகளை தோண்டியெடுப்பதற்கும் உறிஞ்சி வெளியேற்றுவதற்கும் அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதால் இப்பணி முழுமையடைவதற்கு மூன்று மாதங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
கால்வாய்களில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய அதில் குப்பைகள் சேராதிருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், மாநிலத்தில் திடக்கழிவுகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் இந்நிறுவனம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஊராட்சி மன்றங்கள் மற்றும் இதர துறையினரின் ஒத்துழைப்புடன் இதுவரை 78,000 டன் குப்பைகளை அது அகற்றியுள்ளது.