ஷா ஆலம், ஜன 29- கார் நிறுத்துமிடக் கூப்பன் புத்தகங்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் ஒரு வெள்ளி விலையில் விற்பனை செய்யவுள்ளது. இந்த கூப்பன்களை வரும் மார்ச் மாதம் வரை அதாவது கார் நிறுத்தக் கட்டணங்கள் இலக்கவியல் முறைக்கு மாறும் வரை பயன்படுத்தலாம்.
மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு உதவும் வகையிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் வெ.2.50 விலையிலான இந்த கூப்பன்கள் 60 விழுக்காட்டு கழிவு விலையில் விற்கப்படுகின்றன என்று நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாபிஷ் கூறினார்.
மாதாந்திர கூப்பன்கள் 50 விழுக்காட்டுத் தள்ளுபடியுடன் 40 வெள்ளி விலையில் விற்கப்படும் வேளையில் மூன்று கூப்பன்கள் 100 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சிறப்பு விலையிலான கூப்பன்களை பொதுமக்கள் அருகிலுள்ள கிள்ளான் நகராண்மைக் கழக முகப்பிடங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்திற்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை வழி மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.