ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

54,911 குடும்பங்களுக்கு வெள்ள நிவராண நிதியாக வெ.1,000 வழங்கப்பட்டது

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரணத் தொகையை நேற்று வரை 54,911 குடும்பங்கள் பெற்றுள்ளன.

இந்த பந்துவான் சிலாங்கூர் பங்கிட் வெள்ள  உதவித் திட்டத்திற்கு இதுவரை 5 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது  பேஸ்புக் பதிவில் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான்  மாவட்டத்தில் மிக அதிகமாக 13,970 பேரும்,  பெட்டாலிங் மாவட்டத்தில் 13,520 பேரும், கோல லங்காட்டில் 8,042 பேரும் உலு லங்காட்டில் 7,780  பேரும், சிப்பாங்கில் 6,273 பேரும், கோல சிலாங்கூரில் 4,299 பேரும் கோம்பாக்கில் 893 பேரும் உலு சிலாங்கூரில் 94 பேரும் சபாக் பெர்ணமில் 40 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

இதனிடையே, பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கான 10,000 வெள்ளி நிவாரண நிதி கிள்ளான் மாவட்டத்தை சேர்ந்த ஆறு வாரிசுகளுக்கும் சிப்பாங்கில் மூன்று வாரிசுகளுக்கும் உலு லங்காட்டில் இரு வாரிசுகளுக்கும் கோல சிலாங்கூர் மற்றும் கோல லங்காட்டில் தலா ஒரு வாரிசுக்கும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கும் அடிப்படை  வசதிகளை சரி செய்வதற்கும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000  வெள்ளியும் வழங்கப்படுகிறது.

 


Pengarang :