ஷா ஆலம், பிப் 9- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களில் 17,400 பேர் இதுவரை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
தினசரி 2,000 பேரை இலக்காகக் கொண்டு இந்த நிதியுதவித் திட்டம் நேற்று முன்தினம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.
இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் இம்மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 பணியார்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். ஒரு குடும்பத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவதை தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் சொன்னார்.
விண்ணப்பதாரர்களின் அனைத்து தகவல்களை சேகரிக்கும் பணி இவ்வாரத்திற்குள் முழுமை பெற்றுவிடும். இதன் மூலம் துல்லியமான நிதி ஒதுக்கீட்டை நாங்கள் பெற முடியும் என்பதோடு நிதி பகிர்ந்தளிப்பு பணியும் விரைவில் முடிவுக்கு வரும் என்றார் அவர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 74,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அவற்றை முறையாக பரிசீலிக்க தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்