ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஆசிய பூப்பந்துப் போட்டி- தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டாளர்கள் திங்களன்று பயிற்சியைத் தொடக்குவர்

ஷா ஆலம், பிப் 11– இங்கு நடைபெறவிருக்கும் 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இம்மாதம் 14 ஆம் தேதி திங்கள்கிழமை அதாவது போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக செத்தியா ஆலம் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சியைத் தொடக்குவர்.

இந்த போட்டியில் பங்கேற்கும் ஏழு நாடுகளைச் சேர்ந்த அனைத்து ஆட்டக்காரர்களும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை தனிமைப்படுத்தப்  பட்டுள்ளதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது மர்ஜூக்கி கூறினார்.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையைக் கடைபிடிக்கும் அதேவேளையில் கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னை எழாமலிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அந்த ஆட்டக்காரர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள இரண்டு முதல் மூன்று மணி நேரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விளையாட்டாளர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் இந்நாட்டுச சூழலுக்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் முன்னரே அவர்கள் தங்கள் நாட்டில் போதுமான அளவு பயிற்சியை மேற்கொண்டிருப்பர் என நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டாளர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்பதோடு ஊக்க  மருந்து சோதனைக்கு உட்படவும் வேண்டும் என்றார் அவர்.

 


Pengarang :