கோலாலம்பூர், பிப் 11: நாட்டில் நேற்றுவரை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் 79,393 பேர் அல்லது 2.2 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இம்மாதம் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்கிட்ஸ்) மூலம் சிறார்கள் தடுப்பூசியைப் பெற்றனர். முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையில் எட்டு வார இடைவெளியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
கோவிட்நவ் இணையதளத்தின் மூலம் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் நேற்றுவரை சுமார் 1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 703 பெரியவர்கள் அல்லது 55.2 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
அதோடு 2 கோடியே 29 லட்சத்து 34 ஆயிரத்து 496 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர், மேலும் 2 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 20 பேர் அல்லது 99.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதுவரை, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 27 லட்சத்து 94 ஆயிரத்து 416 பேர் அல்லது 88.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 72 ஆயிரத்து 87 பேர் அல்லது 91.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
நேற்று 173,428 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 18,343 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 1,739 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 153,346 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர். இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 10 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.
– பெர்னாமா