ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 64,388 குடும்பங்களுக்கு உதவி நிதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், பிப் 13- இன்று கலை 10.00 மணி நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 64,388 பேர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதியை பெற்றுள்ளனர்.

இந்த உதவித் திட்டத்திற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 6 கோடியே 45 லட்சத்து 18 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக 17,336 பேருக்கு 1 கோடியே 73 லட்சத்து 96 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த நிலையில் பெட்டாலிங் மாவட்டத்தில் 16,917 பேரும் கோல லங்காட்டில் 9,079  பேரும்  உலு லங்காட்டில் 7,843 பேரும் சிப்பாங்கில் 6,855 பேரும் கோல சிலாங்கூரில் 5,430 பேரும் கோம்பாக்கில் 893 பேரும் உலு சிலாங்கூரில் 94 பேரும் சபாக் பெர்ணமில் 40 பேரும் உதவி நிதி பெற்றுள்ளனர்.

இது தவிர வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூரைச் சேர்ந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பெய்த அடை மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :