ஷா ஆலம், பிப் 19- இங்கு நடைபெற்று வரும் 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியில் தேசிய மகளிர் அணி தென் கொரியாவிடம் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து இறுதியாட்டத்திற்குச் செல்லும் அக்குழுவின் கனவு நிராசையானது..
இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் நாட்டின் விளையாட்டாளர் எம். கிஷோனா தென் கொரியாவின் சிம் யுஜினிடம் 21-16, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து முதல் புள்ளியை பெறத் தவறினார்.
மகளிர் இரட்டையர்களான சியோவ் வலேரி மற்றும் டான் பெர்லி ஜோடி 21-15, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் பெக் ஹா நா மற்றும் சியோங் சியுங் இயோன் அணியிடம் தோற்றது.
கடுமையான போட்டியை கொடுத்த அந்த நாட்டின் ஒற்றையர் வீராங்கனையான சிதி நூர்ஷுஹைனி அஸ்மானும் லீ சே யோனிடம் 21-11, 15-21 மற்றும் 21-13 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.
இப்போட்டியில் தோற்றாலும் ஒய் பிரிவில் சாம்பியனாக ஆனதன் வழி தேசிய மகளிர் அணி மே மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் நடக்கும் 2022 உபர் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி அடிப்படையில் தேர்வாகியுள்ளது.
மலேசிய ஆண்கள் குழு இன்று மாலை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அணி தென் கொரியாவை எதிர்கொள்கிறது.