ECONOMYMEDIA STATEMENTSELANGORSMART SELANGOR

மக்கள் அதிகம் கூடும் இடங்களை அடையாளம் காண எஸ்.எஸ்.பி. கட்டண முறை உதவும்

ஷா ஆலம் பிப் 21- இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை (எஸ்.எஸ்.பி.) மாநிலத்தில் அதிகம் மக்கள் கூடும் இடங்களை மாநில அரசு அடையாளம் காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும்.

எதிர்காலத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டங்களை வரைவதில் இந்த எஸ்.எஸ்.பி. திட்டம் மூலம் கிடைக்கும் தரவுகள் பெரிதும் துணை புரியும் என்று ஊராட்சித் துறைகளுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த எஸ்.எஸ்.பி. திட்டத்தினால் கிடைக்கக்கூடிய அனுகூலம் என்னவென்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டு பிடிக்க முடியும். இந்த தரவுகள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வரை இயலும் என்றார் அவர்.

கட்டுப்பாட்டு கார் நிறுத்துமிடப் பகுதியை அல்லது குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு வாகனத்தை நிறுத்துவதற்கான முறையை வெகு விரைவில் அமல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், அனைவரும் கார் நிறுத்துமிட வசதியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் எந்நேரமும் கார்கள் நிரம்பிக் காணப்படுவதால் பிற வாகனமோட்டிகளுக்கு கார் நிறுத்துமிடங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர்.

வங்கிகள் அல்லது பிரசித்தி பெற்ற உணவகங்கள் உள்ள பகுதிகளில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் கார்களை நிறுத்துவதற்கான நேரத்தை ஊராட்சி மன்றங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசு காகித வடிவிலான கார் நிறுத்துமிடக் கட்டண முறைக்கு பதிலாக எஸ்.எஸ்.பி. எனப்படும் இலக்கவியல் கட்டண முறையை விரைவில் அமல்படுத்தவுள்ளது.


Pengarang :