ECONOMYPBTSELANGOR

இன்று வெள்ள நிதி விநியோகம்-  எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் இலவசப் பஸ் சேவை

ஷா ஆலம், பிப் 22- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இன்று  வெள்ள உதவி நிதி பெறுவோரை மண்டபத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஷா ஆலம் ஆலம் மாநகர் மன்றம் இலவசப் பஸ் சேவையை ஏற்பாடு செய்துள்ளது.

டேவான் கம்போங் சுங்கை காண்டீஸ் மற்றும் பாடாங் ராக்யாட் கம்போங் ஜாலான் கெபுனிலிருந்து  டேவான் கெமுனிங்கிற்கு இச்சேவை வழங்கப்படும் என்று மாநகர் மன்றம் கூறியது.

இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இச்சேவை வழங்கப்படும் என்று மாநகர் மன்றம் தனது முகநூலில் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சேவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமல்லாமல் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி முற்று பெறும் வரை வழங்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவு தலைவர் ஷாரின் அகமது நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த இலவசப் பஸ் சேவை தொடர்பான தகவல்கள் முகநூல், டிவிட்டர் போன்ற மாநகர் மன்றத்தின் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பொருள் சேதம் அடைந்தவர்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :