ஷா ஆலம், பிப் 24- செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) கூடிய விரைவில் குறைவான நோய்த் தாக்கம் கொண்ட கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையம் (பி.கே.ஆர்.சி.) சிறிய அளவில் திறக்கப்படும்.
எளிதாக நிர்வகிப்பதற்கு ஏதுவாக அந்த மையம் சிறிய அளவில் தொடங்கப்படும் என்று நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமிருடின் ஹசிம் கூறினார்.
மேப்ஸ் பி.கே.ஆர்.சி. மையத்தித்திற்கான வியூகத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. அந்த மையத்திற்கான இடமும் ஏற்கனவே இருந்த புளோக்கிலிருந்து மாற்றம் காண்கிறது என்று அவர் சொன்னார்.
சுருங்கச் சொன்னால், பி.கே.ஆர்.சி. மையம் இன்னும் மேப்ஸ் விவசாய பூங்காவில் செயல்படும். எனினும் இடத்தின் அளவு, கட்டிடம், செயல்பாடுகள், பணியாளர் எண்ணிக்கை அனைத்தும் வேறுபடும். நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக அதாவது சுமார் 850 பேராக நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்ப் பரவலைத் தொடர்ந்து 14 மாதங்களாக செயல்பட்டு வந்த மேப்ஸ் தனிமைப்படுத்தும் மையம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாரப்பூர்மாக மூடப்பட்டது.