ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று வரை 30.4 விழுக்காட்டு சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 30.4 விழுக்காட்டினர் அல்லது 10 லட்சத்து 78 ஆயிரத்து 539 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டில் நேற்று வரை பெரியவர்களில் 64.4 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 51 லட்சத்து 57 ஆயிரத்து 782 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 610 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 8 ஆயிரத்து 205 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து  33 ஆயிரத்து 876 பேர் அல்லது 91.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 29 லட்சத்து 34 ஆயிரத்து 067 பேர் அல்லது 93.3 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 62,983 பேருக்குக் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 18,781  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,817 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 42,385 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசியக் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ்ச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 113 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :