கோலாலம்பூர், மார்ச் 17 – ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) கணக்கிலிருந்து சிறப்பு தொகையாக 10,000 வெள்ளியை மீட்பதற்கு 55 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தைச் செய்ய வேண்டும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்றும் இ.பி.எஃப். அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் அதிகப்பட்சம் 10,000 வெள்ளியும் குறைந்த பட்சம் 50 வெள்ளியும் மீட்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் முதலாவது கணக்கிலிருந்து சேமிப்பை மீட்பதற்கு முன்னர் 2 வது கணக்கிலுள்ள தொகையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
இதன் தொடர்பான மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஓய்வூதிய நிதி வாரியம் கூறியது.
கோவிட்-19 தொற்றுநோயால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள மலேசியக் குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சேம நிதி வாரியத்திலிருந்து பணத்தை மீட்க அரசாங்கம் அனுமதிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறியிருந்தார்.
அரசாங்கம் இதற்கு முன்னர் ஐ-லெஸாதாரி, ஐ-சினார், ஐ- சித்ரா ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் பணத்தை மீட்க அனுமதி வழங்கியிருந்தது.
– பெர்னாமா