ஷா ஆலம், மார்ச் 18- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக 86 லட்சம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
அந்த ஒதுக்கீட்டில் 20 லட்சம் வெள்ளி கடல்சார் உணவுத் துறையின் மறு மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்று நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.
இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு உரம், கால்நடைகளுக்கான தீவனம் போன்ற விவசாயப் பொருள்கள் வழங்கப்படும் என்பதோடு அத்துறைகள் சார்ந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே ,நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விவாதத்தில் 23 சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து ஜெராம் உறுப்பினர் முகமது ஷாய்ட் ரோஸ்லி கேள்வியெழுப்பியிருந்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருவதாக இஸாம் முன்னதாக கூறியிருந்தார்.