கோலா லங்காட், மார்ச் 18 – ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் இதுவரை 14,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
சிறப்பு ஆட்சேர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட 18,702 மொத்த ஆசிரியர்களின் அடிப்படையில், தற்போது 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தும் பணி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
“இந்தப் புதிய ஆட்சேர்ப்பின் மூலம், இடமாறுதல் விண்ணப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் புதிய ஆசிரியர்களைக் கொண்டு வருவதற்கு முன், நீண்டகாலமாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு முன்னுரிமை அளிப்போம்” என்று எஸ்எம்கே பண்டார் சௌஜனா புத்ராவில் இன்று முன்னதாக நடைபெற்ற ஒப்படைப்பு விழாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
புதிய ஆசிரியர்கள் சேர்ப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடமாற்ற விண்ணப்பங்கள் வரலாற்றில் இதுவரை அங்கீகரிக்கப் பட்டவற்றில் அதிகபட்சமாக 55 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக ராட்ஸி கூறினார்.