கோலாலம்பூர், மார்ச் 19– நாட்டில் நேற்று 24,241 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 185 சம்பவங்கள் அல்லது 0.76 விழுக்காடு கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.
எஞ்சிய 24,056 சம்பவங்கள் நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று 26,615 பேர் நோயின் பாதிப்பிலிருந்து குணமடைந்த வேளையில் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 23 ஆயிரத்து 068 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 185 நோயாளிகளில் 60 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது அறவே பெறாதவர்களாவர். மேலும் 71 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர. எஞ்சிய 54 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
நேற்று 1,665 பேர் நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 679 பேர் அல்லது 40.8 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் மேலும் 986 பேர் அல்லது 59.2 விழுக்காட்டினர் ஒன்றாம் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 383 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 222 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.