ஷா ஆலம் மார்ச் 19- பத்து கேவ்ஸ் பகுதியில் 1,660 கட்டுபடி விலை வீடுகளை உள்ளடக்கிய இரு திட்டங்களை மாநில அரசு தொடக்கியுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடு பெறும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மொத்தம் 1,240 வீடுகள் கொண்ட பாயு ரெசிடென்சி ஸ்ரீ தெமெங்கோங் திட்டத்தில் ஒவ்வொரு வீடும் 225,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ரூமா சிலாங்கூர் கூ ஸ்ரீ தெமெங்கோங் திட்டத்தில் கட்டப்படும் எஞ்சிய வீடுகள் குறைந்த பட்சம் 65,000 வெள்ளி விலையிலானதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
பல்வேறு அடிப்படை வசதிகளையும் ஸ்ரீ கோம்பாக் நெடுஞ்சாலை, எம்.ஆர்.ஆர். 2 நெடுஞ்சாலை, டியூக் நெடுஞ்சாலை உள்ளிட்ட சிறப்பான சாலைத் தொடர்புகளையும் கொண்ட இத்திட்டம் வீடு வாங்குவோரை பெரிதும் ஈர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
பாயு ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு 35 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள வேளையில் ரூமா சிலாங்கூர் வீடுகளின் கட்டுமானம் ஏறக்குறைய 100 விழுக்காடு பூர்த்தியடையவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளடும் இடத்தில் குடிசைவாசிகளாக வசித்து வந்த 29 குடும்பங்களுக்கு ரூமா சிலாங்கூர் கூ வீடுகள் 65,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என அவர் சொன்னார்.
ரூமா சிலாங்கூர் கூ ஸ்ரீ ரெசிடென்சி வீடுகள் 900 சதுர அடி பரப்பளவையும் பாயு ரெசிடென்சி வீடுகள் 659 முதல் 862 சதுர அடி வரையிலான பரப்பளவையும் கொண்டுள்ளன என்றார் அவர்.