கோலாலம்பூர், மார்ச் 30- ஜாலான் கூச்சிங், வர்த்தா லாமாவில் வால்வு கசிவு காரணமாக கோம்பாக் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 144 பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
வால்வு பழுதுபார்க்கும் பணி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 9.00 மணிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது .
பழுதுபார்ப்புப் பணி முற்றுப் பெற்றதும் வாடிக்கையாளர்களுக்கு கட்டம் கட்டமாக நீர் விநியோகம் வழங்கப்படும். நாளை 31 ஆம் தேதி காலை 9.00 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
பழுதுபார்க்கும் பணி மேற்கொள்வதற்கு முன்னதாக போதுமான நீரை சேமித்து வைக்குமாறு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டது.
அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு டேங்கர் லோரிகள் மூலம் நீர் விநியோகம் வழங்கப்படும் என்று அது கூறியது.
நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் www.airselangor.com என்ற இணையதளம் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் சாதனங்கள் மூலம் தெரிவிக்கப்படும் .