ஷா ஆலம், ஏப்ரல் 7- ரமலான் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) வரிசை எண் முறையைப் பயன்படுத்தவிருக்கிறது. சந்தையில் ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் இல்லாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக,தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார். நாம் எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நுழைந்திருந்தாலும் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்கும் நோக்கிலும் சந்தையில் அதிக நெரிசல் இல்லாதிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் இத்திட்டத்தை அமல் செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார். சந்தையில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம் என்பதோடு சிறார்களையும் அழைத்து வரவேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் ஆலோசனை கூறினார். வணிகர்கள் எப்போதும் தூய்மையையும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளையும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநகர் மன்றத்தின் சுகாதாரத் துறை ரமலான் சந்தைகளில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/04/Bazar-Ramadan4-1-960x594.jpg)