கோலாலம்பூர், மே 2- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக நோன்புப் பெருநாளை கொண்டாடும் வேளையில் பொது மக்கள் எந்நேரமும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு ரமலான் மற்றும் ஷவால் பெருநாள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் கொண்டாடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஈராண்டுகளாக மக்கள் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக நடத்தி வந்த போராட்டத்தின் பலனாக நாடு தற்போது எண்டமிக் கட்டத்தை நோக்கி பயணிக்கத் தொடக்கியுள்ளதோடு இருள் நீங்கி ஒளியும் தென்படத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசித் மற்றும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் நோய்த் எதிர்ப்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு பல்வேறு போராட்டங்களையும் சவால்களையும் நாம் சந்தித்தோம். நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டுமாய் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இறைவன் நமக்கு அருளிய உடலாரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் ஒரு போதும் அலட்சியம் காட்டக் கூடாது. மனித வாழ்வு முழுமையடைவதற்கும் நாடு மேம்பாடு காண்பதற்கும் அடித்தளமாக விளங்குவது உடலாரோக்கியமே என அவர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.