தஞ்சோங் மாலிம், மே 2- நெடுஞ்சாலைகளில் குறைவான எண்ணிக்கையிலானோர் மட்டுமே அவசரத் தடத்தைப் பயன்படுத்துவது பெருநாள் கால கண்காணிப்பு நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வரும் 18வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது பெரும்பாலான வாகனமோட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ முகமது நட்ஸ்ரி ஹூசேன் கூறினார்.
சட்டத்திற்கு புறம்பான முறையில் அவசரத் தடங்களைப் பயன்படுத்தும் போக்கு ஒரு சிலரிடம் இன்னும் காணப்பட்டாலும் பெரும்பாலான வாகனமோட்டிகள் சிறப்பான முறையில் சாலை விதிகளைக் கடைபிடிக்கின்றனர். விரைவாக தங்களின் இலக்கை அடைவதற்காக அவசரத் தடங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாவே உள்ளது என்றார் அவர்.
வாகனமோட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதையும் காவல் துறையினரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டு நடப்பதையும இது காட்டுகிறது என்றார் அவர்.
வடக்கு –தெற்கு நெடுஞ்சாலையின் தஞ்சோங் மாலிம் டோல் சாவடியில் 18 வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்க அமலாக்கத்தில் டிரோன் எனப்படும் தொலைக்கட்டுப்பாட்டு இலகு வான் ஊர்தியின் பயன்பாட்டைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருநாள் காலத்தில் சாலைப் போக்குவரத்து குற்றங்களைப் புரியும் வாகனமோட்டிகளை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக டிரோன் சாதனத்தின் பயன்பாடு தினசரி மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.