ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுமார் 900,000 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், மே 2- பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 24.5 விழுக்காட்டினர் அல்லது 868,859 பேர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில் 43.3 விழுக்காட்டினர் அல்லது 15 லட்சத்து 36 ஆயிரத்து 766 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 93 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 94 ஆயிரத்து 533 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 96.1 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 92 ஆயிரத்து 178 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.

மேலும், நேற்று வரை நாட்டிலுள்ள பெரியவர்களில் 68.2 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்து 520 பேர் பூஸ்டர் எனப்படும்  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்..

இது தவிர, 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 185 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 448 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 12,380 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 1,847  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 10,015 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 518 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 3 லட்சத்து 25 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கோவிட்-19 தொடர்புடைய 3 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம்  கூறியது.


Pengarang :