ஷா ஆலம், மே 12 – ஜப்பானுடனான கலாசார உறவுகளை எதிர்காலத்தில் நிகழவிருக்கும் தொடர் நிகழ்வுகளின் மூலம் வலுப்படுத்த சிலாங்கூர் விரும்புகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நேற்று சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மலேசியாவுக்கான ஜப்பான் தூதர் தகாஹாஷி கட்சுஹிகோவை அமிருடின் சந்தித்தார்.
தற்போதைய தேசிய மற்றும் வட்டார விவகாரங்களில் எங்கள் கண்ணோட்டங்கள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம் என்று அமிருடின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மையங்கள், அந்தந்த நாடுகளின் தேசிய விநியோகச் சங்கிலிகளில் உள்ள அம்சங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு உள்ளிட்ட பல பொதுவான விஷயங்களை அமிருடினும் தகாஹாஷியும் விவாதித்தனர்.
மேலும், இயற்கை பேரிடர்களின் சவாலை எதிர்கொள்வது மற்றும் வயோதிக சமுதாயத்தின் விளைவுகள் ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
எதிர்வரும் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் எங்களுடைய கலாசார உறவுகளை வலுப்படுத்தும் கடப்பாட்டை ஜப்பானிய தூதரும் நானும் உறுதிப்படுத்தினோம் என்று அமிருடின் தெரிவித்தார்.