கோலாலம்பூர், மே 13- வைரஸ் எதிர்ப்பு மருந்தான பெக்ஸ்லோவிட் கொடுக்கப்பட்ட மொத்தம் 173 கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மே 9 ஆம் தேதி வரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தின் பயன்பாடு சுகாதார கிளினிக்குகள் மற்றும் 78 அரசு மருத்துவமனைகளில் உள்ள 512 கோவிட் -19 மதிப்பீட்டு மையங்களில் (சி.ஏ சி.) ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த பெக்ஸ்லோவிட் சிகிச்சையில் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவர்கள், ஆக்ஸிஜன் உதவி தேவைப்படாதவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, நாள்பட்ட ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட கோவிட்-19 நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார கிளினிக்குகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள சி.ஏசி.யி. மையங்களுக்குச் சென்று பெக்ஸ்லோவிட் மருந்து தங்களுக்கு ஏற்றதா என்பதைக் கண்டறிந்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கைரி கூறினார்.
நோய்கான அறிகுறி தென்பட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த மருந்தை பெற்றாமல் மட்டுமே கடும் பாதிப்பிலிருந்து விடுபட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.