ECONOMYMEDIA STATEMENT

மனைவி, குழந்தை படுகொலை- சந்தேக நபருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 11- மனைவி மற்றும் மூன்று மாத கைக்குழந்தையை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கி வரும் 18 ஆம் தேதி வரை அவ்வாடவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதியை ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற துணைத் தலைமை பதிவதிகாரி சுஹாய்லா ஷபிபுடின் வழங்கினார்.

கப்பல் துப்புரவுப் பணியாளரான 24 வயதுடைய அந்த ஆடவரை குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் கடந்த ஜூலை 5 முதல் ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்தது.

இங்குள்ள கம்போங் பாக்கார் பத்துவிலுள்ள வீடொன்றில் தன் மனைவி மற்றும் கைக்குழந்தையை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் அவ்வாடவரை போலீசார் இம்மாதம் 4 ஆம் தேதி கைது செய்தனர்.

அவ்விருவரின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவ்வாடவர் நிர்வாணக் கோலத்தில் மோட்டார் சைக்கிளில் பெர்மாஸ் ஜெயா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மடக்கி பிடிக்கப்பட்டார்.


Pengarang :