ECONOMYSELANGOR

கோ டிஜிட்டல் திட்டத்தின் வழி வெ.50,000 வரை வர்த்தக கடனுதவி- ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது

ஷா ஆலம், ஜூலை 28- இணையம் வழி வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் கோ டிஜிட்டல் திட்டத்தின் மூலம் 50,000 வெள்ளி வரை கடனுதவி பெறலாம்.

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நவீன தளங்கள் வாயிலாக இலக்கவியல் மயமாக்குவதில் உதவும் நோக்கில் இத்திட்டம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலக்கவியல் முறையில் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைக்கான சந்தையை மேலும் விரிவுபடுத்தி கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை பெற முடியும் என்று ஹிஜ்ரா அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த வணிகர்களுக்கு உதவும் நோக்கில் கோ டிஜிட்டல் திட்டத்தை மாநில அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தொடக்கியது.

சுமார் மூவாயிரம் வணிகர்களை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளை இலக்கவியல் முறையில் விரிவுபடுத்துவதற்கு தேவையான கையடக்க கணினி உள்ளிட்ட தொடர்பு சாதனங்களை வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது.


Pengarang :