ஷா ஆலம், ஆக 11- இங்குள்ள ஐ-சிட்டியில் டபள் த்ரி பை ஹில்டன் ஹோட்டலை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இன்று காலை 11.00 மணியளவில் தன் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷின் அவர்களுடன் நிகழ்வுக்கு வந்த மேன்மை தங்கிய சுல்தானை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஹில்டன் ஹோட்டல் குழுமத்தின் தென்கிழக்காசியாவுக்கான தலைமை செயல் முறை அதிகாரி ஜேமி மியாட் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு ஐ-சிட்டி நகர் மற்றும் டபள் த்ரி பை ஹில்ட்ன் ஷா ஆலமின் வளர்ச்சி, ஹில்டன் வர்த்தக காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.
மொத்தம் 300 அறைகளைக் கொண்ட இந்த 21 மாடி ஹோட்டல் இலக்கவியல் முறை சாவிகளை கொண்டுள்ளதோடு ஐ-சிட்டியின் அழகிய காட்சிகளை காண்பதற்குரிய வாய்ப்பினையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது என்று ஜேமி தனதுரையில் கூறினார்.
மேலும் இந்த ஹோட்டலில் 12 அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 12 மாநாட்டு மண்டபங்கள், நீச்சல் குளம், ஸ்பா, ஜிம்னேஸியம், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்று அவர் சொன்னார்.
தங்களின் இந்த புதிய தங்கும் விடுதிக்கு வரும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்வதாக கூறிய அவர், அவர்களுக்கு மனநிறைவளிக்கும் வகையில் திருப்திகரமான சேவை இங்கு வழங்கப்படும் என்றார்.