சுங்கை பட்டாணி, ஆக 16- பள்ளி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த சம்பவத்தில் மாணவி ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு மேலும் 15 மாணவர்களும் வேன் ஓட்டுநரும் லேசான காயங்களுக்குள்ளாயினர்.
இச்சம்பவம் திக்காம் பத்து, தாமான் ரூவில் இன்று காலை 7.40 மணியளவில் நிகழ்ந்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் முகமதுல் ஏசான் முகமது ஜைன் கூறினார்.
இச்சம்பவத்தில் அந்த பள்ளி வேனின் ஓட்டுநரான 50 வயது ஆடவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகிலுள்ள கால்வாயில் விழுந்தது. வேனில் சிக்கிக் கொண்ட மாணவர்கள் இடிபாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர் என்றார் அவர்.
லேசான காயங்களுக்குள்ளான 7 முதல் 15 வயது வரையிலான அம்மாணவர்கள் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.