ஷா ஆலம், ஆக 27- வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான மாதிரிப் பயிற்சிகள் அடுத்த மாதம் நடத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மீட்பு நடவடிக்கை, நடவடிக்கை அறையை திறப்பது மற்றும் உதவிகளை வழங்குவது ஆகியவை இந்த மாதிரி பயிற்சியில் இடம் பெறும் என்று அவர் சொன்னார்.
மாநில பேரிடர் செயல்குழு கூட்டத்திற்கு நான் அண்மையில் தலைமையேற்று அனைத்தும் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்தேன். அதே சமயம், திட்டமிடப்பட்டுள்ள சில அடிப்படை வசதித் திட்டங்கள் விரைந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும்படியும் கேட்டுக் கொண்டேன் என்றார் அவர்.
கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்புப் பணிகள் சற்று சுணக்கமடைந்ததைக் போல் அல்லாமல் இனி வரும் காலங்களில் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து நிலையிலும் நாம் முழு தயார் நிலையில் உள்ளோம். கடந்த கால அனுபவங்கள் வாயிலாக கிடைத்த படிப்பினைகள் வாயிலாக வெள்ள அபாயத்தின் போது சமிக்ஞை ஒலி எழுப்புவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தரம் உயர்த்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
வெள்ள நீரை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள 98 குளங்கள் மற்றும் ஏரிகளுடன் இணைப்புகளை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில அரசு கடந்த 24 ஆம் தேதி கூறியிருந்தது..